Monday, January 31, 2011

ஆபயன் குன்றும்

ஆபயன் குன்றும்

என் நண்பர் ஒருவர் (மின்தமிழ்க் குழுமத்தில் இருப்பவர்) கீழேக்
கொடுக்கப்பட்டுள்ள இடுகைகளைத் தனி மடலில் குறித்திருந்தார்.

http://www.tamilnadutalk.com/portal/index.php?/topic/18677-%E0%AE%85%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D/

http://www.jeyamohan.in/?p=1422

http://www.tamilbrahmins.com/general-discussions/5557-enge-brahmanana-3.html

இந்தச் சுட்டிகளில், “ஆபயன் குன்றும்…” என்ற குறளுக்குக்
கொடுக்கப்பட்டுள்ள விளக்கங்கள் பற்றி என் கருத்தை
பதிய சொன்னார். சமணக் குறளுக்கு அந்தக் குறள் எவ்வாறு
பொருந்தும் என்றும் தனி பதிவிட்டு என் பிளாகில் எழுதுமாறும்
கேட்டிருந்தார்.

இக்குறளை யான் முன்னமே (அகத்தியக் குழுமத்தில்) எதிர்க்
கொண்டிருக்கிறேன். குறள் பற்றிய விவாதத்தில் எவராவது
ஒருவர், இந்தக் குறளுக்கு விளக்கம் சொல்ல போக,
அவற்றை அப்படியே உடும்புப் பிடியாகப் பிடித்துக் கொண்டு,
எல்லா வலைப்பக்கத்திலும் அவற்றையே எழுதத் தொடங்கி
விடுகிறார்கள். குறள் சமணம் சார்ந்தது என்றால், இந்தக்
குறளுக்கு என்ன பொருள் சொல்வார்கள் என்பது மாதிரி
கேட்கவும் தொடங்கிவிடுகிறார்கள். யாரும் அந்த குறளின்
விளக்கம்ப் பொருத்தமாக இருக்கிறதா? என்று தங்கள் அறிவில்
உரசிப் பார்ப்பதில்லை.

”ஆபயன குன்றும்…” என்றக் குறளுக்கு பரிமேலழகர் உரையைப்
பின்பற்றிச் செல்வதேயிதற்கு காரணம்.

இந்தக் குறள் “கொடுங்கோன்மை” என்ற அதிகாரத்தில் வருகிறது.
அதாவது “செங்கோன்மை” என்ற அதிகாரத்திற்குப் பிறகு
வருகிறது என்பது இங்கு முக்கியம். செங்கோன்மை என்பது
ஒரு அரசன் எவ்வாறு சிறப்பாக ஆட்சி தன் நாட்டை
ஆளவேண்டும் என்பதைச் சொல்லும். அவ்வாறே ஒரு
அரசன் எவ்வாறு முறைத் தவறி ஆட்சிச் செய்யக்கூடாது
என்பதை சொல்கிறது “கொடுங்கோமை” என்ற அதிகாரம்.

ஆபயன்

ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர்
காவலன் காவான் எனின் – திருக்குறள் (560)

என் கருத்தைப் பார்ப்பதற்கு முன் திருக்குறள் அத்தாரிட்டியாகக்
கருதப்படும் பரிமேலழகர் (: என்ன சொல்கிறார் என்றுப் பார்ப்போம்.

பரிமேலழகர் உரை:

காவலன் காவான் எனின் – காத்தற்கரிய அரசன் உயிர்களைக்
காவானாயின்; ஆ பயன் குன்றும் – அறன் இல்லாத அவன்
நாட்டுப் பசுக்களும் பால் குன்றும்; அறுதொழிலோர் நூல்
மறப்பர் – அந்தணரும் நூல்களை மறந்து விடுவர்.

ஆபயன்: ஆவாற் கொள்ளும் பயன், அறுதொழிலாவன:
ஓதல், ஒதுவித்தல், வேட்டல், வேட்பித்தல், ஈதல், ஏற்றல்
என இவை. பசுக்கள் பால் குன்றியவழி அவியின்மையானும்,
அது கொடுத்தற்குரியார் மந்திரம், கற்பம் என்பன
ஓதாமையானும், வேள்வி நடவாதாம்; ஆகவே, வானம்
பெயல் ஒல்லாது என்பதாயிற்று. இவை இரண்டு பாட்டானும்
அவன் நாட்டின்கண் நிகழும் குற்றம் கூறப்பட்டது.

இந்த உரையிலிருந்து நமக்கு தெரியவரும் கருத்துக்கள்:

அரசன் முறையாக ஆட்சிச் செய்யவில்லையென்றால்,

• ஆவினால் (பசுக்களினால்) கிடைக்கக் கூடியப் பயன்கள் கிடைக்காது,
• அறுதொழில் செய்யும் பிராமணர்களின் வேள்விகள் முறையாக நடக்காதாம்,
• முறையான வேள்விகள் நடக்காமையால், மழை பொழியாதாம், மழைப்
பொழியாததால் நாட்டில் பஞ்சம் தலைவிரித்தாடுமாம் சொல்கிறார் பரிமேலழகர்.

(மனதைத் தொட்டுச் சொல்லுங்கள், இந்த உரை பொருத்தமாயிருக்கிறதா??) :-)

எப்படி உரையைச் சுற்றி வளைத்து, திரித்தெழுதியிருக்கிறார்
பாருங்கள். சரி, அந்தக் குறளுக்கு என்னதான் பொருள்?

உண்மை பொருள்

ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர்
காவலன் காவான் எனின்

என்பதற்கு,

காவலன் காவான் எனின் – அரசன் முறையாக ஆட்சி செய்து
மக்களை காப்பாற்றாவிட்டால்; ஆபயன் குன்றும் – ஆகின்ற
பயன்கள் குன்றும்/கிடைக்காது; அறுதொழிலோர்
நூல்மறப்பர் – ஆறு தொழில்கள் செய்வோர் தத்தம்
கடமைகள் முறையாக செய்யாமல், நாட்டில் எதுவும்
முறைப்படி இயங்காது என்பதாம்!

தெளிவுரை:

அரசன் நேர்மையாக ஆட்சி செய்யவில்லையென்றால்,
ஆறு தொழில்களான1, வாள், வரைவு, வாணிபம், உழவு,
கல்வி மற்றும் சிற்பம் செய்து காக்கும் ஆறு தொழிலோர்
தமது தொழில் தர்மத்திலிருந்து தவறுவார்கள், அதனால்
அந்தத் தொழில்கள்லிருந்து ஆக கூடியப் பயன்கள்
சென்றடையாது! என்னை?

ஆபயன் – என்பதற்கு பசுவினால் கிடைக்கும் பயன்கள்
என்றுப் பொருள் கொள்ளக் கூடாதா? எனின், ஆப்பயன்
என்று வந்திருந்தால் அவ்வாறுப் பொருள் கொள்ளலாம்.
ஆ+பயன் = ஆப்பயன் என்று ஒற்று மிகுதல் வேண்டும்
என்பது இலக்கண விதி!

காட்டாக: சிலப்பதிகாரத்தில் அடைக்கலக் காதையில்,

“..கவுந்தி ஐயையைக் கண்டுஅடி தொழலும்
ஆகாத்து ஓம்பி ஆப்பயன் அளிக்கும்..” – (பாடல் வரி: 199 – 120)

ஆப்பயன் என்று வருவது ஈண்டு நினைத்தற்பாலது!

அறுதொழிலோர் – ஆறு தொழிலோர் என்பது பிராமணர்களைத்
தானேக் குறிக்கும்? குறிக்காது!. இடத்திற்கு ஏற்றாற் போல்
பொருள் கொள்ள வேண்டும். இந்த இடத்தில் அவ்வாறுப் பொருள்
கொண்டால், அந்தக் குறளின் சிறப்புக் குன்றிப் போகும்!

எவ்வாறெனின்,

அரசன் நாட்டில் உள்ள அனைத்துத் தரப்பு மக்களையும்
காக்க வேண்டுமேயன்றி, ஒருசாராரை மட்டும் (பிராமணர்களை)
காப்பாற்ற அரசாட்சிச் செய்யமாட்டான். அறுதொழிலோன்
என்றிருந்திருந்தால் அது அப்பட்டமாக பிராமணர்களைக்
குறிக்கும் என்று துணிந்துக் கூறலாம். அறுதொழிலோர்
என்பது இங்கு ஆறு தொழில்களை செய்வோரைக் குறிக்கும்.
அறுதொழிலோர் எனபதற்கு ஆறு தொழில் செய்வோர்
என்றுப் பொருள் கொண்டால், அக்குறளுக்கு சிறப்பாக அமைவதோடு
அல்லாமல் நாட்டின் சமூகத்தையும் சேர்த்தே குறித்ததுப் போலாகும்!
என்னை?

மாறாக பரிமேலழகர் உரைக் கூறுவதுபோல் ஒருசாராரை மட்டும்
போற்றுவதாக பொருள் கொள்வதை எந்த நடுநிலையாளனும் ஒப்ப
மாட்டான்! என்ன யான் சொல்வது சரிதானே!


முடிபு:

இது போன்ற குறள்களை வைத்து குறளாசிரியர் உள்ளம் காண
நினைப்பது, எதைத் தின்றால் பித்தம் தெளியும் என்பது போலவாம்.
குறளாசிரியர் உள்ளம் கடவுள் வாழ்த்து அதிகாரத்திலேயே தெள்ள
தெளிவாகத் தெரிந்திருந்தும், இந்த வகையான திரிபு வாதங்கள்
மூலம் வாதிப்பது அறிவுடைமையாகாது!


இரா.பா,
சென்னை.
--------------------------------------------------------------

1 -“ஒழியாக் கற்பத்தரு மருங்கி
உலகாம் போகபூ மியிடை
பழியாப் பிணங்கிமா நிலத்தோர்
பணிந்தே நிற்பக்கரந் தருளும்
உழவே தொழில் வணிக வரைவு
உற்ற சிற்பவித் தையினால்
அழியா வகை வந்தாட் கொண்டாய்
அடியோஞ் சிற்றலழி யேலே!
- ஆதிநாதர்ப் பிள்ளைத்தமிழ்

"வரைவொடு தொழிலே வித்தை வாணிகம் உழவே சிற்பம்
உரைசெய்யும் போகபூமி யொழிவினி லாதிகாலம்
விரைசெறி பிண்டிவேந்தன் விதித்த லினஃதேயம்ம
கருமபூமி என்னும் பேர்கண்ட தொன்றுண்டு நூலில்"
- சூடாமணி நிகண்டு

2 comments:

Dr. Kanaka AjithaDoss said...

அய்யா மிக்க நன்றி .மிகவும் சரியான விளக்கம். நேர்மையான விளக்கம்.எத்தனை அழகாக எழுதுகிறீர்கள்.

நா. கணேசன் said...

”ஆதியாய் *நின்றது* மன்னவன் கோல்!” என்னும் தொடரில் நின்றது என்று ஏன் கடந்தகாலத்தைச் சுட்டும் வினையைப் பயன்படுத்தியுள்ளார் வள்ளுவர் என்று விளக்கியுள்ளீர்கள்.

கோல் - அரசாட்சி. எழுத்து வகைகளில் பிராமி, கோலெழுத்து, வட்டெழுத்து, கிரந்த எழுத்து, ... என்றெல்லாம் உண்டு. கோலெழுத்து என்றால் என்ன? Rod script, straight script என்றெல்லாம் விளக்கியிருப்பர். என்றுமே எனக்கு அது திருப்தியாக இருந்ததில்லை.

கோலெழுத்து என்பதென்னை?ப்ரான்சிஸ் வைட் எல்லிஸ் என்னும் சென்னை கலெக்டர் கட்டுரையைப் படித்தபோது விளக்கம் கிடைத்தது. சுமார் 200 வருடம் முன்பு வாழ்ந்த அவர் திராவிட மொழியியலை விஞ்ஞானபூர்வமாக ஆரம்பித்துவைத்தவர். எல்லிஸ்
கோலெழுத்து என்றால் அரச ஆணைகள் எழுதப்படும் எழுத்து என்கிறார். அதாவது, கோல் = செங்கோல், எனவே அரசனைக் குறிக்கும் என்கிறார். பொருள் விளக்கமானது. 20-ஆம் நூற்றாண்டில் இதை யாரும் எழுதியதாய் தெரியவில்லை.

-------


ஆபயன் - ஆகின்ற பயன் என்ற பொருள் எடுப்பதற்குத் துணை செய்யச் சிலப்பதிகாரத்தில் வரும் ‘ஆப்பயன்’ உதாரணமும் அருமை.

சமணத் தமிழ் இலக்கியத்தைப் பல நூல்களைக் கற்று என்றும் விளக்கி வர வாழ்த்துக்கள்.

அன்புடன்,
நா. கணேசன்